மேயர் பொறுப்புணர்ந்து பணியாற்ற வேண்டும்: மாமன்ற உறுப்பினர் பேச்சு
திருச்சி, ஜன.31 திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணைமேயர் திவ்யா, ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி 43 ஆவது வார்டு உறுப்பினர் ந.செந்தில் பேசுகையில், என்னுடைய 43 ஆவது வார்டில் ஜோதிபுரம் குறிஞ்சிநகர், குறிஞ்சிநகர் விஸ்தரிப்பு, பர்மா காலனி, நேதாஜி சாலை, ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சரியாக வருவதில்லை அதனை உடனடியாக சரி செய்து தர வேண்டுகிறேன். மேலும் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெனோசெபின் என்கிற மாணவிக்கு பார்வை தெரியாத செய்தியை நாளிதழில் படித்து தெரிந்ததின் பேரில் உடனடியாக அந்த மாணவிக்கு பார்வை கிடைப்பதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். துணை முதலமைச்சராக இருந்த போது சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் மகள் சுரேகா என்ற மாணவிக்கு பார்வை தெரியாத தகவலறிந்து அதிகாலையில் அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று அந்த மாணவிக்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து அவருக்கு மீண்டும் பார்வை கிடைக்க ஏற்பாடு செய்தார். அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் கீழ் மக்கள் பணியாற்றுகின்ற நாம் அதே வழியில் மனித நேயத்தோடும், பொறுப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும். கடந்த 7- ஆம் தேதி எனது வார்டில் பதினோரு வயது மாணவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னை தொலைபேசியில் அழைத்து விசாரித்தார். மேலும் உயிரிழந்த மாணவர் வீட்டிற்கு சென்று அவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் மாநகராட்சி எல்லைக்குள் நடைபெற்ற இந்த சம்பவத்தை பற்றி மாநகர மேயர் என்னிடம் தொலைபேசியில் கேட்கவில்லை. உயிரிழந்த மாணவரின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே வணக்கத்துக்குரிய மேயர் தனது பொறுப்புணர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் வழியிலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழியிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதை சொல்லி மிகவும் வருத்தத்தோடு கூறுகிறேன் எனப் பேசினார்.