திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள முதுவத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேரோட்ட விழாவையொட்டி கடந்த 23ஆம் தேதி செல்லி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது. தினசரி கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடி அழைத்தல் நிகழ்ச்சியும் பொங்கல் பூஜையும் நடைபெற்றது. பின்னர் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைப்பெற்றது.
முக்கிய நிகழ்வான செல்லியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேரோட்ட விழாவில் முதுவத்தூர் மேலரசூர் கீழ் அரசூர் கல்லக்குடி பழங்காநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதையடுத்து இன்று மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி குடி புகுதளுடன் திருவிழா நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.