காவிரி ஆற்றில் குளித்த போது மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
திருச்சி, ஆக.5 முசிறி அருகே தொட்டியம் பகுதியில் காவேரி ஆற்றில் குளித்த போது மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவரது நண்பர் மாதேஷ் (30). இவர்கள் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் நண்பர்களுடன் தொட்டியம் அடுத்த நத்தம் முல்லைநகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது மாதேஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். உடன் குளித்த பிரகாஷ் நண்பன் மாதேசை காப்பற்ற போராடியுள்ளார். ஆனால் முடியாமல் போனது. இதில் பிரகாஷ் ஆற்று நீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒரு கரையில் ஒதுங்கி உயிர்த் தப்பினார். மீட்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். சம்பவத்தில் மாயமான மாதேசை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில் இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இன்று காலை முதல் மீட்பு படையினர் மாயமானவரை தேடி வந்தனர். இந்தநிலையில் மாதேஷ் மாயமான இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுருட்ட பாளையம் பகுதியில் சடலமாக மாதேஷ் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம்குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியரால் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி குளித்த போது மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது