பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்!
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தலைமை வகித்தார். துறைத் பேராசிரியர் ஜெரோம் பெர்னான்டோ முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக இடமலைப்பட்டிபுதூர் நகராட்சி தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் புஷ்பலதாபாலாஜி கலந்துகொண்டார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய பேரா.கி.சதீஷ்குமார் பெண்கள் கல்வியை பேராயுதமாகக்கொண்டு இவ்வாழ்வை கடக்க வேண்டும். சமூக ஊடகங்களை சமூக மாற்றத்திற்காக பயன்படுத்திட வேண்டும், மாறாக பெண்கள் மீதான வெறுப்புணர்வு,

காழ்ப்புணர்வு, கொண்டு தவறாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு, அவர்களை அச்சுறுத்தும் போக்கு அறவே தவிர்க்க வேண்டும். நம்மோடு பயணிக்கும் அறிவார்ந்த உணர்வுசார் இணையானவளாக மதித்து நடத்திட வேண்டும் என்றார். பெண்கள் வாசிப்பு வெளியை விரிவாக்கினால் வாழ்வு வசப்படும், சிந்தனை வளம் கூடும், படைப்பாற்றல் வழியே பண்பாட்டை செழுமையுடன் காத்திட வாசிப்பே துணைபுரியும் என்றார். வரலாறுதானே படிக்கிறாய் என்று கேலி பேசுவோர் முன் வரலாறு படைத்திட ஒவ்வொருவரும் அரசுப்பணியில் உயர்
நிலையை எட்ட வேண்டும். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது பற்றி கவலைப்படாமல் எந்த நிலையிலும் யாருக்காக சிந்திக்கிறோம், எவர் முன்னேற்றத்திற்காக உழைக்கிறோம் என்பதே நம்மை உயர்த்தும். இனம், மதம், சாதி, மொழி, ஆகிய பின்னணி கடந்து எவன் சிந்திக்கிறானோ அவன் பின்னே உலகம் சுழலும். சிந்தனைத்திறனை மேம்படுத்தி யாவையும் எதிர்கொள்ள நெஞ்சுரம் நிறைந்த பெண்களாய் வலம்
வரவேண்டும். சிறப்பு அழைப்பாளராய் பங்கேற்ற தலைமை ஆசிரியை புஷ்பலதா பாலாஜி எந்தச் சூழலிலும் பெண்ணுக்கு கல்வியும் தன்னம்பிக்கையும் மட்டுமே தனித்துவத்தை கொடுக்கும் என்றார். முன்னதாக வரவேற்புரையை பேராசிரியர் சீத்தாலட்சுமி ஆற்றினார். பேராசிரியர் கஸ்தூரி நன்றியுரையாற்றினார். பேராசிரியர் சேவியர் மற்றும் இளநிலை முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர்.