அவதூறு வழக்கில் சிக்கிய பாதிரியார் திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்து!

0 448
Stalin trichy visit

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த மாதம் 18-ந் தேதி சிறுபான்மை சமூகத்தினர் உரிமை மீட்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டார். அப்போது, அவர் இந்து கடவுள்கள், பிரதமர் மோடி மற்றும் மாநில தி.மு.க. அரசையும், எம்.எல்.ஏ.க்களையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சமூக வலைதளங்களில் பாதிரியாரின் பேச்சு, பெரும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், கிறிஸ்தவ இயக்க நிறுவனருமான ஸ்டீபன் ஆகியோர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் ஜார்ஜ் பொன்னையா மனு செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், மனுதாரர் ஜார்ஜ் பொன்னையா, மீண்டும் அரசியல் தலைவர்களையோ, மதரீதியிலோ இனி அவதூறாக பேசமாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ததன் அடிப்படையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மனுதாரர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என்றும், திருச்சியில் தங்கியிருந்து, அங்குள்ள தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் காரில் புறப்பட்டு வந்து, திருச்சி பாலக்கரையில் தங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையத்திற்கு உள்ள ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.