மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல் : மாவட்ட ஆட்சியர், துரை வைகோ எம்.பி. பங்கேற்பு
திருச்சி, மே 29 திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர், எம்.பி துரை வைகோ பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ (artificial limbs manufacturing corporation of India) நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி எம்.பி துரை வைகோ மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினர். இந்நிகழ்வில் ₹.21.73 லட்சம் மதிப்பில் 461 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், அக்சிலா ஊன்றுகோல், எல்போ ஊன்றுகோல் மற்றும் செயற்கை கை கால்கள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து துரை வைகோ எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
மாற்று திறனாளிகளின் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சேர்ந்து இந்த முகாமை நடத்தி உள்ளார்கள். கிட்டத்தட்ட 21 லட்சம் ரூபாய் செலவில், 670 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் இந்த முகம் நடைபெற்று உள்ளது. இந்த இலவச உபகரணங்களை பெறுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் வாழ்க்கையில் சுலபமாகவும், சுயமாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் இயங்க முடியும். ஒன்றிய அரசு, மாநில அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படும் வகையில் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இந்த முகாம் நடைபெற்றது. இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். மேலும் இது
போன்ற முயற்சிகள் தொடர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.