ஆட்டோ ஓட்டுனரை பாராட்டிய எஸ்.பி.சுஜித்குமார்
மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை குடும்பத்தினருடன் நேரில் அழைத்து பாராட்டிய திருச்சி எஸ்.பி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த வினோத் என்பவரது மனைவி கோமளாதேவி (வயது 28). இவர் கடந்த 17 ம் தேதி மாலை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது 4 வயது மகனை அழைத்துக்கொண்டு பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து செனறபோது மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென கோமளாதேவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பமுயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த செல்லையா என்ற ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் மறித்ததால் கொள்ளையர்கள் ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர். இதில் ஒரு கொள்ளையன் தப்பியோடிய நிலையில் மற்றொருவரை ஆட்டோ ஓட்டுனர் செல்லையா பொதுமக்களுடன் சேர்ந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் ஆட்டோவை குறுக்கே நிறுத்தி கொள்ளையர்களை மடக்கிப்பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கொள்ளையனை பிடிக்க காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் செல்லையாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஆட்டோ ஓட்டுனர் செல்லையா மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டியதுடன் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.