பாம்பு கடித்து பள்ளி மாணவி சாவு
துறையூரை அடுத்த கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். விவசாயி. இவரது மகள் வித்யா (வயது 11). கோட்டாத்தூர் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி தனது பெற்றோர்களுடன் வயலுக்கு சென்றவர் மாலை வீடு திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வயல் வெளியில் உள்ள வரப்பில் நடந்தபோது இடது காலில் பாம்பு கடித்தது. வித்தியாவின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிறுமியை கடித்த பாம்பு தப்பித்து ஓடியதை பார்த்தார்கள். உடனடியாக சிறுமியை துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
துறையூர் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டபோது விஷத்தன்மை அதிகமாக உள்ளதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.