திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் மைக்கேல்பட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் தன் தாயுடன் வசித்து வருகிறார். இவர் நர்சிங் முடித்துவிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை மைக்கேல் பட்டி கீழத்தெரு சேர்ந்த முத்துசாமி மகன் 30 வயதான ஆனந்த்.
அந்த இளம்பெண் நர்ஸ் வேலைக்கு செல்லும் போதும், வரும்போது ஆனந்த் அடிக்கடி காதலிக்க சொல்லி வற்புறுத்தியும் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். மேலும் இளம்பெண் வீட்டின் பின்புறம் எட்டிப் பார்ப்பதும், வீட்டின் கதவின் வழியாக உள்ள ஓட்டையில் குச்சியை விட்டு ஆட்டுவதுமாக இளம்பெண்ணிற்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத இளம்பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இளம்பெண் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறுத்த ஆனந்த் பாலியல் உறவுக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கடும் மன உளச்சலுக்கு ஆளான இளம்பெண் விஷமறிந்தி தற்கொலை முயற்சி செய்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இளம்பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லால்குடி அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.