ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
திருச்சி, ஏப்.26 பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும். பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து நம்பெருமாளை தரிசனம் செய்வர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி கடந்த ஏப்ரல் 18 -ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நம்பெருமாள் கருடவாகனம், யாளிவாகனம், யானை வாகனம், தங்ககுதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்சவாகனம் என தினசரி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 9ம்நாளான இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நேற்று கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள் மற்றும் முத்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் சூடி அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரியதிருத்தேரில்; எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் சரியாக காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். தேரானது 4சித்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார்.
இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
சித்திரை தேரின்போது நம்பெருமாளை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், சகலதோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் பெருந்திரளானோர் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். மேலும் பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்வதற்காகவும், வடம்பிடித்து இழுத்துச் செல்லவும் போலீசாரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில்நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.