மாணவி பலி எதிரொலி : காலாவதியான 800 கிலோ சைனீஸ் நூடுல்ஸ் அழிப்பு
திருச்சி,செப்.3 திருச்சியில் 800 கிலோ காலாவதியான உணவு பொருள் பறிமுதல், செய்து உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகா புரத்தைச் சார்ந்த ஜாக்குலின் என்ற பள்ளி மாணவி இரவு நேரத்தில் நூடுல்ஸ் மற்றும் கோக் சாப்பிட்டுவிட்டு மர்மமான முறையில் 01.09.2024 காலையில் அவரது உறவினர்கள் பார்க்கும் போது இறந்து விட்டார்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்தபோது அது சைனீஸ் நூடுல்ஸ் என்பது கண்டறியப்பட்டது. மேலும் இதனை அப்பள்ளி மாணவி அமேசான் இணையதளம் மூலம் வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. இதே போன்ற இந்த சைனீஸ் நூடுல்ஸ் திருச்சி மொத்த வியாபரம் செய்யும் ஒரு உணவு வணிகத்தில் இருப்பதைக் கண்டறிந்து அதே போன்ற நூடுல்ஸ் ஒன்று சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டது,
மேலும் அந்த மொத்த விற்பனையாளரின் உணவு வணிகத்தை ஆய்வு செய்த போது அங்கு காலாவதியான உணவு பொருட்கள் சுமார் 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு செய்யப்பட்டு அரியமங்கலம் குப்பை கிடங்கில் அழிக்கப்பட உள்ளது.
மேற்கண்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அதே பேட்ச் எண் கொண்ட கோக் குளிர்பானத்தையும் சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட மொத்த உணவு வணிகத்தை தற்காலிகமாக சீல் செய்யப்பட்டது.
மேலும் அந்த கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன் படி பிரிவு 56 ன் கீழ் வழக்கு தொடரப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ஆர். ரமேஷ்பாபு அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, கந்தவேல், மகாதேவன், சையது இப்ராஹிம், வடிவேல், செல்வி. ஹர்ஷவர்த்தினி, சினேகா, சீபா, ராஜகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு, கூறுகையில், உணவு வணிகர்கள் காலாவதியான பொருட்களை தங்களது விற்பனை வளாகத்தில் வைத்திருக்கக் கூடாது என்றும், காலாவநியான பொருட்கள் வைத்திருக்கும் பட்சத்தில் அதனை தனி ஒருஅறையில் காலாவதியான பொருட்கள் இருக்கும் அறை என்ற குறிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும், மேலும் அதற்குண்டான பதிவேடுகளும் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006 சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.