திருச்சி உறையூர் வைக்கோல்கார தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய 2-வது மகள் ஜோதிகா(வயது 18) டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் தியாகராஜன் கோழி இறைச்சி வாங்கி வந்துள்ளார். அதை சமைத்து குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு ஜோதிகாவுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் வீடுதிரும்பினார்.
நள்ளிரவில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், ஜோதிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.