ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது
திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஊனையூர் அருகே உள்ள, பெரிளஅருளாப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆட்டுப்பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சப்தம் போடவே எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிடுவதற்காக விரட்டிச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டுப்பட்டியில் இருந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் அது தீயணைப்பு வீரர்களுக்கு போக்குகாட்டி அருகில் உள்ள தண்ணீரில் சென்றது. உடனே பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். மேலும் இதுபற்றி வனத்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.