திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 65). பொட்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது ஊரிலிருந்து விராலிமலையிலுள்ள தனது மகன் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி மேம்பாலம் அருகே செல்லும் போது நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியதில் கோவிந்தராஜ் தலையில் படுகாயமடைந்தார். உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.