பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்
திருச்சி, ஜுன் 14 திருச்சி திருவானைக்காவல் வாசுதேவன் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மகேந்திரன் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அவ்வப்போது கிடைக்கும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் புதுப்பாலம் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்க்காக தனது மோட்டார் பைக்கை நிறுத்தி உள்ளார் அப்போது கால் தடுமாறி கீழே விழுந்ததில் படுக்காயம் அடைந்தார்.இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.