4-வது உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் வருகிற ஆகஸ்ட் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு அனைத்து இந்திய காது கேளாதோர் தடகள கவுன்சில் சார்பில் புதுடெல்லி ஜவகர்ஹலால் நேரு ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி தடகள போட்டி நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர் மணிகண்டன் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவுக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மணிகண்டனுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ, மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், போலந்தில் நடக்கும் தடகள போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்க உள்ள திருச்சியை சேர்ந்த மணிகண்டனை மாவட்ட தடகள சங்கம் சார்பில் வாழ்த்தி வழிஅனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.