சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு
கும்பகோணம், அக்.7 அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 9 நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து துவக்கப்பட்டு 200வது நாளை முன்னிட்டுவருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி அ வரவேற்றார்.
அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 9 நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து துவக்கப்பட்டு (05-10-2024) 200வது நாளை முன்னிட்டு அதிகாலை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டதோடு, பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் S.ஶ்ரீதர், துணை மேலாளர் A.தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர்M.திருஞானசம்பந்தம், S.ராஜா, திரு.G.ராஜ்மோகன், சுற்றுலா பயணிகள் மற்றும் ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர்.
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கு இணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 24-02-2024 அன்று 9 நவக்கிரக திருக்கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்தினை துவங்கி வைத்தார்கள். கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து தொடர்ந்து சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. குறைந்த பட்ச கட்டணமாக ரூ.750/-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றதையெடுத்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதலாக வாரம் மூன்று தினங்கள் ஒரு குளிர்சாதன பேருந்தும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணம் ரூ.1350/-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
200 நாட்களை கடந்து இச்சிறப்பு சுற்றுலா பேருந்து மூலம் இது வரை சுமார் 14,000 பயணிகள் பயணித்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பணிகள் வருகை தந்து நவக்கிரக கோவில்களை எந்த சிரமமுமின்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
நவகிரக சிறப்பு பேருந்தானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 5.00 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம், இரண்டாவதாக திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 7.15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம் பின்பு காலை உணவு இடைவேளை பின்பு ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9.00 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம் , பின்பு 10.00 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம், பிறகு காலை 11.00 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், காலை 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம், மதியம் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை, மதியம் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம் , மாலை 4.00 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம். மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு இரவு 8.00 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் எவ்வித சிரமமின்றி பயணிக்க “மொபைல் ஆப் www.tnstc.in (Mobile App) Android/I phone கைபேசி மூலமாகவும்” முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் நவக்கிரக சுற்றுலா பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம் நிர்வாக இயக்குநர் என்று தெரிவித்துள்ளார்.