சோமவாரத்தை முன்னிட்டு உத்தமர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு முன்னதாக விநாயகர் பூஜை, புண்யாகாவஜனம், கலசபூஜை, சங்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் பிச்சாண்டேஸ்வரர் மற்றும் சௌந்தர்யபார்வதிக்கு பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்று மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், கலச புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் விநாயகர் பூஜை, புண்யாகாவஜனம், சங்கு பூஜை நடைபெற்று மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.