திருச்சி, அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் கேட் முதல் அந்தநல்லூர் படித்துறை வரையிலான 1 கீலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறி மக்கள் உயிரை காவு வாங்க காத்திருப்பதை கண்டித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்றைக்கு நாற்று நடும் போராட்டம் நடத்துவது என அறிவிப்பு செய்யப்பட்டது.
போராட்டத்தையொட்டி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததால் உறுதியாக போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. உடனடியாக போராட்ட களத்திற்கு ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன் ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் பாலாஜி NHAl துறையின் அதிகாரிகள் அனைவரும் நேரடியாக வருகை தந்து DYFI நிர்வாகிகளிடம் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட சாலையை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரமான மூன்று அடுக்கு சாலையாக அமைத்துக் கொடுப்பதோடு வெள்ளை கோடுகள், இரவில் மின்னும் விளக்குகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகளோடு செய்து தந்திட டெல்லி தலைமையகத்திற்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒன்னரை மாதத்திற்குள் புதிய சாலை அமைத்து தரப்படும் எனவும் தற்போது ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய சிமெண்ட் ஜல்லியில்லான கலவை கொண்டு இரண்டு நாட்களுக்குள் சாலையை சரி செய்து தருவதாய் உத்திரவாதம் அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் DYFI மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத் மணி, அந்தநல்லூர் DYFI ஒன்றிய செயலாளர் அஜித்குமார், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், திருப்பராய்த்துறை ஊ.ம. தலைவர் பிரகாசமூர்த்தி, சி.பி.எம் ஒன்றிய குழு தோழர்கள் சந்திரன், முருகன், கோபாலகிருஷ்ணன், செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.