திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் டயானா (வயது 20). இவர் கடந்த 12ம் தேதி பொன்மலை ரயில்வே அம்பேத்கர் திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஜெனிபர் டயானாவிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஜெனிபர் டயானா பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தர். வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் அவரிடம் செல்போனை பறித்து தப்பி ஓடிய குண்டூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(வயது 20) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் சுப்பிரமணியபுரம் இரஞ்சிதபுரம் கருப்பையா தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 54). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்மலை ஆர்மரிகேட் எதிரில் உள்ள வேன் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கௌரி சங்கர்(வயது 21) அதே பகுதியை சேர்ந்த எடிசன் (வயது 20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.