2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது… குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என ஆணையர் எச்சரிக்கை!
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 14.01.2022-ந் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா ஹோட்டல் முன்பு ஒரு நபரை கொலை செய்தது தொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் (வயது 25) அர்ஜீனன் (வயது 23) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், அர்ஜீனன் மீது 3 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, மேற்படி மணிகண்டன் மற்றும் அர்ஜீனன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல்நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.