பெட்டிசன் மேளாவில் 156 மனுக்கள் மீது உடனடி தீர்வு!
காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொண்டும்,
பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள தமிழக முதலமைச்சரிடம் கொடுத்த மனுக்களுக்கும், காவல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர்களிடமும் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைத்திட வேண்டி முகாம்கள் (பெட்டிசன் மேளா) நடத்திட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.

இதையடுத்து கன்டோன்மென்ட் சரகத்தில் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலும், ஸ்ரீரங்கம் சரகத்தில் கோட்டை பகுதியில் உதவி கமிஷனர் (பொறுப்பு) பாரதிதாசன் தலைமையிலும், தில்லைநகர் சரகம் உறையூரில் உதவி கமிஷனர் ராஜூ தலைமையிலும், காந்திமார்க்கெட் சரகத்தில் உதவி கமிஷனர் (பொறுப்பு) ராஜசேகர் தலைமையிலும், கே.கே.நகர் சரகத்தில் ஏர்போர்ட்டில் காவல் நிலையத்தில் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையிலும் பெட்டிசன் மேளா நடத்தப்பட்டது.
திருச்சி மாநகரில் 4 சரகங்களில் நடத்தப்பட்ட பெட்டிசன் மேளாவில் மொத்தம் 180 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு எதிர் மனுதாரர்களை அழைத்து நேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 156 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது மேல் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.