மின்வாரிய ஊழியரிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்கள்
திருச்சி, நவ.19 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்வாரிய அலுவலக ஊழியரிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி சமய நகரைச் சேர்ந்தவர் ரேணுகா (47). இவர் திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை செய்து வருகிறார். நேற்று தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டி வாகனத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றின் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை மறித்து அவரிடம் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் கொள்ளிடம் காவல்துறையினல் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.