திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து புலிவலம் செல்லும் சாலையில் தண்டலைபுத்தூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனை மேற்பார்வையாளராக ஆறுமுகம்(50) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் கடையில் விற்பனையை முடித்து விட்டு ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 340 பணத்தை கடையின் உள்ளே உள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஷட்டரை திறந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த பணம், மதுபான பாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை.
நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த அலாரம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவைகளை உடைத்து எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது. சம்பவம் குறித்து கடை விற்பனையாளர் ஆறுமுகம் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில்முசிறி துணை சூப்பிரண்டு அருள்மணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் கடையின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.4 லட்சம் பணம் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.