அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பண்ணப்பட்டி ஊராட்சியில் அமயபுரம், கோனார் ஊத்துப்பட்டி, என்.பெருமாம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம், கால்நடை மருத்துவமனை, வங்கி, கூட்டுறவு சங்கம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள் என அனைத்துதரப்பினரும் தங்களது அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக அருகில் உள்ள பன்னாங்கொம்பிற்கு தான் செல்லவேண்டும். இந்நிலையில் அமயபுரத்தில் இருந்து பின்னத்தூர் வரை செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் அதனை தார் சாலையாக மாற்றவேண்டும் என ஊராட்சி மன்றம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தொடர்மழையால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமானதுடன் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சகதியில் சிக்கி கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அனைவரும் கடும் சிரமமடைந்தனர். சேறும், சகதியுமாக மாறி விட்ட சாலையை தார் சாலையாக அமைக்கக்கோரி அமயபுரம், பெருமாம்பட்டி, கோனார் ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.