திருச்சி பொன்மலை போலீஸ் எல்லைக்குட்பட்ட பொன்மலை மயூரா பேக்கரி முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி ஜெயராமன் மகன் சிவராஜ் (வயது 24) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பொன்ன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபல ரவுடியான அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் (வயது 26) மற்றும் சரத் என்ற ரத்தினசாமி (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்பகை காரணமாக இக்கொலை நடந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கைதான அலெக்ஸ் மீது 4-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. எனவே, அலெக்ஸ் மற்றும் சரத் ஆகியோர் தொடர் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதால், இருவர் மீதும் ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பொன்மலை இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார். அதை அவர் ஏற்று, அலெக்டர், சரத் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் திருச்சி மாநகரில் தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளார்.