திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் என்.சதீஸ் உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலர் கிரண் மேற்பார்வையில் திருச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓமாந்தூர் காப்புக்காடு பகுதியில் உதவி வன பாதுகாவலர் என்.வி.நாகையா தலைமையிலான தனிப்படையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, திருப்பைஞ்சீலி வழியாக மூவாரம்பாளையம் செல்லும் சாலையில் உடும்பு மற்றும் கொக்குகளை நாட்டு துப்பாக்கியால் சுட்டு 2 பேர் வேட்டையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களை வனத்துறையினர் பிடித்து திருச்சி வனச்சரக அலுவலர் ஆர்.ரவிகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் நம்பர்1 டோல்கேட் நரிக்குறவர் தோப்பை சேர்ந்த நரிக்குறவர்களான ராஜா(வயது 65), குமரேசன்(வயது 25) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் வேட்டையாடி கொல்லப்பட்ட உடும்பு, கொக்கு உள்ளிட்ட பறவைகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். மேலும் 2 பேரும் முசிறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி லால்குடி சிறையில் அடைக்கப்பட்டனர்.