போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் திவ்யா (வயது 25). கர்ப்பிணியான இவருக்கு போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திட இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சக போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கர்ப்பிணி போலீசான திவ்யா அவரது கணவர் கோபி ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ஜனனி பிரியா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி கர்ப்பிணி பெண் போலீசுக்கு பலரும் வளையல் அணிவித்து மலர் தூவி வாழ்த்தினர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதேபோல் வழக்கமாக வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு ஏதாவது அன்பளிப்பு வழங்கப்படும். அதேபோல் கலந்து கொண்டவர்களுக்கு சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
மாங்கல்ய நாண், குங்குமம், வெற்றிலை பாக்கு, இனிப்பு–காரம் ஆகியவையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சுப்பையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். காவல் நிலையத்தில் பணிபுரிந்து சக பெண் கர்ப்பிணி போலீசுக்கு காவலர்களே சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.