கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி கேட்டு பா.ஜ.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மெத்தனப்போக்கை காட்டும் ஆளும் தி.மு.க. அரசை கண்டித்தும், கோவை பள்ளி மாணவி வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதீய ஜனதா மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி மாநில செயலாளர் லீலாசிவக்குமார், துணைத் தலைவி உமா, பொதுச் செயலாளர் துர்கா தேவி, பொருளாளர் மலர்கொடி, செயலாளர் வேளாங்கண்ணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.