சொத்து தகராறில் அண்ணனை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள புரவி நகரில் சொத்து தகராறில் அண்ணனை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஹரிராஜன். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து பாகம் பிரிப்பதில் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 17 ம் தேதி நொச்சியத்தில் உள்ள புரவி நகரில் தனது தந்தை சந்திரசேகரனுடன் ஹரிராஜன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தம்பி சரவணன் அண்ணன் மீது பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.