பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது; அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 481 குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக நகர்வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வழங்கினார்கள்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், பள்ளிகூடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
2015ம் ஆண்டிற்கு பின்னர் மிகப் பெரிய மழையை தமிழகம் சந்தித்து வருகிறது. பள்ளிக்கூடங்களில் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக இடிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளோம். சிபிஎஸ்இ மட்டுமே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைத்துள்ளனர். நம்மைப் பொருத்தவரை அது போன்ற தேர்வுகள் ஏதும் நடத்தவில்லை என்றார்.