திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 481 குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக நகர்வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வழங்கினார்கள்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு எங்களை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது. இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற இலங்கை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்த கேள்விக்கு இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும்.
பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வழக்கு போடுகின்றனர் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டுகிறார். ஆட்சியில் இருக்கும் போது சில சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை. அரசு எதை செய்ய முடியுமோ அதை தான் சட்ட ரீதியாக செய்து உள்ளோம். முதல்வர் இதன் மீது நடவடிக்கை எடுப்பார். அவர்களுக்கு தெரிந்தது இந்த ஒரே பிரச்சினை மட்டும் தான். இதை வைத்து தான் அரசியல் செய்து வருகின்றனர்.
பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முறையாக கால்வாய்களை கட்டி இருந்தால், வெட்டி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சினை இல்லை. 200 வருடத்தில் 4வது முறையாக 100 செ.மீ மழை பெய்துள்ளது. முதல்வர் நேரடியாக சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தேங்குவதற்கான காரணம் என்ன? எந்த இடத்தில் தண்ணீர் தேங்கி என்பதனை ஆய்வு செய்து அடுத்த ஓராண்டில் அதனை முழுமையாக சரி செய்ய வேண்டும்
என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் உள்ள மெட்ரோ வாட்டர் பைப்புகளை மாற்ற சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே குறை கூறுவதிலாவது அவர்கள் ஒன்றிணைந்து கூறுவது என்பது சரிதான். திண்டுக்கல் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக திருச்சி அரியாறு மற்றும் கோறையாற்றில் அதிகபடியான நீர் தேங்கி உள்ளது. இது குறித்து பொது பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கணக்கிடு செய்து வருகிறார்கள், எனவே உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.