தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (கும்ப) லிட் திருச்சி மண்டல அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாது:-
திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக காலை மற்றும் மாலை பயணிகள் பயன்பாடு அதிகம் இருக்கும் நேரங்களில் பஸ்சில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 10 கூடுதல் பஸ்கள் மூலம் 24 குறுநடைகள் கீழ்கண்ட ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதன் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.
இதனை தடுக்கும் பொருட்டு, காலை மற்றும் மாலை பயணிகள் பயன்பாடு அதிகமுள்ள நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நெ.1 டோல்கேட், திருவெறும்பூர், பஞ்சப்பூர், ஆலம்பட்டிபுதூர், சோமரசம்பேட்டை, கொத்தம்பட்டி ஆகிய ஊர்களுக்கு 6 பஸ்கள் மூலம் 16 குறுநடைகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம் ஒரு பஸ்சின் மூலம் 2 குறுநடைகளும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் வேப்பூர், வி.கைகாட்டி ஆகிய ஊர்களுக்கு 3 பஸ்கள் மூலம் 6 குறுநடைகளும் ஆக மொத்தம் 10 பஸ்கள் மூலம் 24 குறுநடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி மண்டலத்தின் முக்கிய பஸ் நிறுத்தங்களில் காலை மற்றும்மாலை பயணிகளின் அடர்வு அதிகமுள்ள நேரங்களில் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தியும், கண்காணிப்பு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.