மணப்பாறையில் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார் வேட்பு மனு தாக்கல்
திருச்சி,ஏப்.6 மணப்பாறையில் அதிமுக வேட்பாளர் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல்.
தொகுதி மக்களுக்கான கனவு திட்டத்தை நிறைவேற்றுவேன் என வேட்பாளர் பேட்டி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார் இன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனுவினை அளித்தார். முன்னதாக வேட்பாளர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரசிலையில் இருந்து கூட்டணி கட்சியினருடன் மேள தாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
மணப்பாறை தொகுதி மண்ணின் மைந்தனான எனக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியைச் சேர்ந்த நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் எனபதால் மக்களின் பிரச்சினைகள் தெளிவாகத் தெரியும். வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அதனை நிறைவேற்றுவதே எனது கடமையாகும். எனது ஒரே ஒரு கனவு திட்டம். காவிரியில் பொன்னணியாறு அணை, கண்ணூத்து ஏரி, மருங்கி வரை மணப்பாறை தொகுதியில் உள்ள அனைத்து ஒன்றியங்களையும் இணைத்து நீர் வழித் திட்டத்தை செயல்படுத்தினால் தொகுதி முழுவதும் விவசாயதம் செழிக்கும், கால்நடை வளர்க்கலாம், சுற்றுலா பகுதிகள் உருவாகும். இதனால் தொகுதி வளமானதாகும். இதனால் மணப்பாறை தொகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். அதேபோல் மணப்பாறை தொகுதியில் சென்னை – திண்டுக்கல், கன்னியாகுமரி இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் விபத்தை தடுக்கும் வகையில் விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களில் பறக்கும் சாலை அமைக்க ஆசை உள்ளது. எதிரணி வேட்பாளர் (மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல்சமது) கடந்த முறை தொகுதியில் தங்கியிருந்த பணி செய்வேன் என்றார். ஆனால் தேர்தலுக்கு மட்டுமே வந்து செல்கிறார். தொகுதியில் இருந்தால் மட்டுமே மக்களின் பிரச்சினைகள் தெரியும். எனவே மண்ணின் மைந்தனான எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றார்.