கல்லக்குடியில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்..
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
மத்திய அரசு உத்தரவின்படி ஊழல் தடுப்பு வாரம் நவம்பர் 1 ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபண்ணா தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பாரதி வீரர்கள் சையத் அசாருதீன், தரணிதரன், மோகன் உள்ளிட்டோர் கல்லக்குடி பேருந்து நிலையம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்கவும், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதையும் மற்றும் ஊழல் செய்வதை தவிர்க்கவும் என அறிவுறுருத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் தீயணைப்பு வாகனத்துடன் ஒலிபெருக்கி மூலம் கல்லக்குடி கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.