வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அருள் நகரில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
தாளக்குடி ஊராட்சியில் உள்ள அருள்நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவர் தனது உறவினரின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்குவதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ஒரு பவுன் நகையை திருடிச் சென்றனர்.வெளியே சென்ற இளங்கோ தனது வேலைகளை முடித்துவிட்டு இன்று காலை வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் கொள்ளிடம் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்க்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் நிலா வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. பின்னர் திருட்டு சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சிறு திருட்டுகள் நடந்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென உத்தரவிட்டதன் பேரில் ஒரு பவுன் நகை திருட்டுக்காக கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.