மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினைத் தொடர்ந்து மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறையூர் பெரிய கடை வீதி வடக்குத் தெருவில் பெரிய ஏரி மற்றும் தெப்பக்குளத்தில் நீர் நிறைந்துள்ளதையும், இதனைத் தொடர்ந்து வடக்குத் தெருவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். மேலும், சித்தகம்பூர், செல்லிப்பாளையம் ஏரிகளில் மழை நீர் நிறைந்துள்ளதையும், இதனைத் தொடர்ந்து வரதராஜபுரம், செங்காட்டுப்பட்டி, கீரம்பூர் ஏரி மற்றும் அதன் அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் வயல்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் சரண்யா மோகன் தாஸ் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, நீர்வள ஆதாரத் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கோரையாற்றில் மழையினால் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் உள்ளார்.
திருச்சி உறையூர் பெஸ்கி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழை நீரை அகற்றி உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.