100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
தா.பேட்டை அருகே தும்பலம் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் சர்மிளா பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, தும்பலம் ஊராட்சி தலைவர் சரளா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லதா, ஒன்றிய ஆணையர்கள் ஆர்.மனோகரன், ஆர்.பி.குணசேகரன், மருத்துவ அலுவலர்கள் கவுரி, நந்தினி உள்ளிட்ட பலர் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர்.
அப்போது கர்ப்பிணி பெண்களின் கழுத்தில் மாலை அணிவித்தும், மஞ்சள், குங்குமம், வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட 5 வகையான உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது. வளைகாப்பு விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார ஒருங்கிணைப்பாளர் கீதா வரவேற்றார். இறுதியில் வட்டார திட்ட உதவியாளர் சாந்தி நன்றி கூறினார்.