தொடரும் உண்ணாவிரத போராட்டம்….முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கும் இலங்கை தமிழர்கள்
இன்று 6வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் எங்கள் சகோதரர்கள் 10 பேர் விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். ஒரு சொட்டு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாக பட்டினியாக இருந்து தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா என்ற எண்ணத்தோடு இந்த உண்ணாநிலை போராட்டத்தில் காத்திருக்கிறார்கள். எத்தனை முறை எங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச முடியாது தவித்து இருப்போம். எங்கள் உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் பொழுது எத்தனை முறை ஒரு முறையாவது அவர்களை சந்தித்து விட்டு உதவ முடியாது என ஏங்கி இருப்போம்.
எங்கள் குடும்பங்கள் மிகவும் வறுமையில் இருக்கும் இந்த நிலையில் நாங்கள் அவர்களுக்கு உழைத்துக் கொடுக்க நாதி இல்லாதவர்களாக இந்த சிறையிலே தினமும் அழுது கொண்டு வாழ்கிறோம் . இலங்கையிலே தற்போதைய வறுமையின் காரணமாக தாங்கள் தாராள மனம் கொண்டு அத்தனை கோடி மதிப்புள்ள உணவு பொருட்களை அனுப்பி வைத்தீர்கள் . நாங்கள் இங்கு உமக்கு அருகிலேயே பட்டினியாக எங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் . எங்களையும் ஒருமுறை கண்ணெடுத்துப் பார்த்து எங்கள் விடுதலைக்காக உதவி செய்யுங்கள் . மிகவும் மனமிரங்கி கேட்டுக்கொள்கிறோம் எங்களை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள் .