கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைப் போட்டி

0 247
Stalin trichy visit

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையிலான நுண்கலைப் போட்டி விழா Classic Fest – 23 நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார். முதல்வர் முனைவர் ப.நடராஜன்  வரவேற்புரையாற்றினார், நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ சங்கத்தின் மேனாள் தலைவர் , பி.சி.ராய் தேசிய விருது பெற்ற மருத்துவர் அஷ்ரப் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர்தம் சிறப்புரையில் நவீன அறிவியல் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் அறிவியல் சாதனங்களை அறத்துடன் கையாள வேண்டும், வகுப்பறை கல்வி மட்டுமின்றி அறநெறிக் கல்வி, மற்றும் அன்றாட சமூக நிகழ்வுகளை, உலகத்தின் போக்குகளை நாள்தோறும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். கலையின் வாயிலாகப் பண்பட்ட சமூகத்தை உருவாக்குதல் வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து பத்து வகையான செவ்வியல் கலைப் போட்டிகள் நடைபெற்றது. இருபதிற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். மாலை நிறைவு விழாவில் திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் அ.குணசேகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


அவர்தம் சிறப்புரையில் மாணவர்கள் ஆர்வமுடன் கலைகளைக் கற்று நெறியுடன் மேடையேறி நிகழ்த்தும் மரபு பாராட்டிற்குரியது. மாணவர்களின் கலை ஆற்றலை வளர்த்தெடுத்து வாய்ப்பளிக்கிற மேடையாக கலைக் காவிரி திகழ்வது தனிச்சிறப்பிற்குரியது. வெற்றி பெற்ற மாணவர்கள் கலைப் பண்பாட்டுத் துறையிலும் உயர்கல்வியிலும் சிறப்பாக செயல்பட்டு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெற்று சாம்பியன் சுழற்கேடயத்தை ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியும் இரண்டாமிடத்தை காவேரி மகளிர் கல்லூரியும் வென்றனர். நுண்கலைப் போட்டிகளின் ஒருங்கிணைப் பாளர்களான முனைவர் இல.கோவிந்தன், முனைவர் உமா மகேஸ்வரி, முனைவர் ரோஸ்லின் மேரி, முனைவர் ராஜேஷ் பாபு, முனைவர் ஆக்னஸ் சர்மிளி, திரு. பிரகாஷ் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். நிகழ்வை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் தொகுத்து வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.