போலீசாரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு

திருச்சி, பிப்.20 திருச்சியில் காவல்துறையினரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் இரண்டுபேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிடு சூடு நடத்தினர். திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும் சகோதரர்கள். இதில் துரைசாமி என்பவர் மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5கொலை வழக்குகள் என 69 வழக்குகள் உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளது. இந்த நிலையில் துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் தொடர்புடைய நகைகளை குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினரிடம் விசாரணையில் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க காவல்துறையினரை அவர்கள் இருவரையும் குழுமாயி அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் இருவரும் காவல்துறையினரை தள்ளிவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கி தப்பித்துள்ளனர். இருவரையும் காவல்துறையினர் விரட்டி பிடிக்கும் என்ற போது அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை கத்தியால் வெட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளை பிடிக்கவும் இருவரையும் காலில் சுட்டு காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் – இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளையும் காவல்துறையினரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.