மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு விழா நிறைவு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் உள்ள சவோரியார் தேவாலயத்தின் திருவிழா மற்றும் புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு தேவாலயத்தின் முன்பு உள்ள திடலில் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை துவங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.
இதில் தேனி மாவட்டம், பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த வேலு பிரதர்ஸ் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த மாடுபிடி வீரராக திருச்சி கல்லிக்குடியைச் சேர்ந்த வேலன் என்பவர் தேர்வு செய்யப்பட்டு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில் 574 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. சீறி வரும் காளைகளை அடக்க 243 மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 25 வீரர்கள் என 10 சுற்றுகளாக களம் இறக்கப்பட்டனர். மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 29 பேர் காயமடைந்தனர்.