கலைஞர் கனவு இல்லம்: திருநங்கைகள் பூமி பூஜை
திருச்சி, ஆக.29 திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அகல்யா, அர்ச்சனா, ராசாத்தி, மேரியம்மா, ரோஜா, சிம்ரன், மீனாட்சி, தேன்மொழி ஆகியோர் திருநங்கைகள் ஆவர். இவர்களுக்கு தமிழக அரசு வீடு கட்டிக் கொள்வதற்காக அண்மையில் பட்டாவுடன் நிலம் வழங்கியது.
இதையடுத்து திருநங்கைகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்தனர். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு திருநங்கைகள் 8 பேருக்கும் மொத்தம் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகட்டிக் கொள்வதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதற்கான ஆணையும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து திருநங்கைகள் தங்களுக்கு வழங்கிய நிலத்தில் வீடு கட்டுவதற்காக நல்ல நேரம் பார்த்து மனையில் வாஸ்து வழிபாடு நடத்தி தண்ணீர் விட்டு பூஜை செய்தனர்.அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருநங்கைகள் வீடு கட்டுவதற்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து திருநங்கை ராசாத்தி என்பவர் கூறும்போது இடம் ஒதுக்கீடு செய்து வீடு கட்டுவதற்கு நிதியும் அளித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேலை வீட்டின் கட்டுமான பணிகளை முழுமையாக முடித்திட திருநங்கைகள் ஆகிய எங்களுக்கு சமூக அமைப்பில் பொறுப்பு வகிப்போர் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அரசு ஒதுக்கீடு செய்து கொடுத்த நிலத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டும் முயற்சி மேற்கொண்டுள்ள திருநங்கைகளின் செயலுக்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.