திருச்சி கருமண்டபம் ஆல்பாநகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 58). தனியார் டிராவல்ஸ் அதிபரான இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்று, தனது தாய் வீடான ஒட்டன்சத்திரத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரே மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் தனியே வசித்து வந்த சங்கர், அதிக கடன் தொல்லைக்கு உள்ளானார். இதனால் கடனை அடைப்பதற்காக வைத்திருந்த 6 பஸ்களில் 4 பஸ்களை விற்று கடனை அடைத்தார். இதனால் மன விரக்தியில் இருந்து வந்தார்.
மேலும், மனைவி பிரிந்த சோகத்தில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கன்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.