மாயமான மூதாட்டி பத்திரமாக மீட்பு
திருச்சி, ஜன. 9 மணப்பாறை அருகே வனப்பகுதியில் மாயமான 80 வயது மூதாட்டி இரண்டு நாட்களுக்குப்பின் பத்திரமாக மீட்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டி மேற்கு களத்தைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 80). 100 நாள் திட்ட பணியாளரான இவர் 7 ம் தேதி காலை ராமரெட்டியபட்டி அருகே செம்மலையடிவாரத்தில் உள்ள அம்மன் கோவில் காடு பகுதியில் கசிவு நீர் குட்டை அமைக்கும் பணிக்காக சென்ற நிலையில் மாயமானார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடிவந்த நிலையில் நேற்று வையம்பட்டி போலீசார் திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைத்து மூதாட்டியை வனப்பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக வனப்பகுதியில் தேடியபோது ஒரு மரத்தின் அருகே மூதாட்டி உட்கார்ந்து இருப்பதை கண்ட உறவினர்கள் மகிழ்ச்சியடைந்து மூதாட்டியை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வனப்பகுதியில் மாயமான மூதாட்டி இரண்டு நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.