திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைபள்ளியில் நடைபெற்று வரும் கொரோனோ தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதற்கு அதிகம் ஒத்துழைப்பு கொடுத்த 14 ஊராட்சி மன்ற
தலைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேடியோ தெரபி சிகிச்சை வழங்குவதற்கான தனி துறை ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துறைக்கு தேவையான கருவிகள் 25 நாட்களுக்குள் வாங்கி நிறுவப்படும். நகர்புற வளர்சி துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1,10,971 மாணவர்களில் மன அழுத்தம் உள்ள மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கும் பணியில் 333 மன நல மருத்துவர்களும், மன நல ஆலோசகர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 80 விழுக்காடு மாணவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் சுமார் 200 மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களை மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறோம். இந்தியாவில் இத்தகைய நல்ல நடைமுறை தமிழ்நாட்டில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை என முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இதுவரை 56% ( தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது) – இன்று மாலை 60% மக்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்கிற நிலை வரும். 17% மக்கள் இரண்டாவது தவனை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர் என்றார்.