ஆட்டோ மீது மினி லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி, ஜூன் 29 திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மொத்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலவகையான பூக்களை மினி லாரி மற்றும் லோட் ஆட்டோக்கள் மூலம் விற்பனைக்காக எடுத்து வருவது வழக்கம். அதன்படி அதிகாலை ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரோஜா பூக்களுடன் மினிலாரி ஒன்று வந்தது.
அந்த மினிலாரி சென்னை – திருச்சி ட்ரங்க் ரோட்டில் திருவானைக்காவலில் இருந்து திருவரங்கம் பகுதிக்கு திரும்பும் போது பாரம் தாங்காமல் மினி லாரி ஒரு புறமாக சாய்ந்து கொண்டே சிறிது தூரம் சென்றது. அப்பொழுது சாலை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது மினி லாரி கவிழ்ந்து மேலே விழுந்தது.
இதனால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் முழுவதுமாக நசுங்கி ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் காந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்து
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த ஆட்டோ ஓட்டுநரை அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிறகு விபத்துக்குள்ளான ரோஜாப் பூ லோடு உடன் இருந்த மினி லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.