திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் வழியாகச் செல்லும் நந்தியாற்றில் மழையினால் நீர் மிகுந்து செல்வதையும், இந்த ஆற்றின் குறுக்கே செல்லும் பாதை தாழ்வாக உள்ளதையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு, இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே மதகுகளுடன் கூடிய உயர்மட்டப் பாலம் அமைத்திடவும், ஆற்றினைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, நீர்வள ஆதாரத் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கொணலை ஏரி 16 ஆண்டுகளுக்குப் பின் மழையினால் நீர் நிறைந்துள்ளதைப் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மிகைநீர் செல்லும் பகுதியில் தடுப்பணை அமைத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இப்பகுதி மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஏரியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவினார்.