உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்
20.12.2023 அன்று காலை 9.30 மணி அளவில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலகமும் இணைந்து நடத்திய உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். உடலாலும் மனதாலும் உயர்ந்த பண்புடைய இளைய சமூகத்தை உருவாக்குவதில் உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்றும், மாணவர்களை நல்வழிப் படுத்தும் நல்லாசிரியர் பெருமக்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் என்றும் சிறப்புரை நிகழ்த்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் சரோஜினி முன்னிலை வகித்தார். தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் து.பிரசன்னபாலாஜி உடற்கல்வித் துறையின் சமீபத்திய போக்குகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் கார்த்திகேயன் ஆய்வியல் நோக்கில் உடற்கல்வியியல் துறை சார்ந்த செய்திகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிலரங்கில் 450 கும் மேற்பட்ட உடற்கல்வியியல் துறை ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.