திருச்சி அரசு மருத்துவமனையில் புதியதாக வாஸ்குலர் அறுவை சிகிச்சை மையம் திறப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் புதியதாக வாஸ்குலர் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதனை அரசு மருத்துவமனை டீன் வனிதா ரிப்பன் வெட்டி திறந்த வைத்தார். அப்போது அவர் கூறுகையில் இதுவரை வாஸ்குலர் அறுவை சிகிச்சை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை, தஞ்சை மற்றும் சென்னையில் உள்ள உயர் மருத்துவமனை மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து வாஸ்குலர் அறுவை சிகிச்சை மையம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்த மையம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படும். இங்கு வரும் நோயாளிகள் வாஸ்குலர் குறைபாடு மற்றும் மற்ற வாஸ்குலர் நோய்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உயர்தர சிகிச்சையை இலவசமாக பெறலாம் என்றார்.